சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த "கருப்பு" திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சூர்யாவுக்கு முதலாவது 200 கோடியைக் கடந்த வாரம் பெற்றுத் தந்த இந்தப் படம் தற்போது முதலாவது 300 கோடியைப் பெற்றுத் தந்துள்ளது. இப்படி ஒரு சாதனையைப் பெற சூர்யாவுக்கு 29 வருடங்கள் ஆகியிருக்கிறது.

2012ல் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் கூட 12 வருடங்களில் 2024ல் வெளிவந்த "அமரன்" படம் மூலம் 300 கோடி சாதனையைப் படைத்துவிட்டார். ஆனால், சூர்யாவுக்கு அதை விட இரண்டு மடங்கு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு சாதனை இத்தனை வருடங்களுக்குப் பிறகு கிடைத்ததை சூர்யா தொடர்ந்து காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அவரது வசூல் களம் வெற்றிடமாகிவிட்டது. சிறப்பான கமர்ஷியல் படங்களை யார் கொடுக்கிறார்களோ அவர்கள் அந்தக் களத்தில் முந்துவார்கள். இப்போதைக்கு சூர்யா முதல் ஆளாக களத்தில் நுழைந்துள்ளார். அதைத் தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.