அறிமுகப் படத்திலேயே வெற்றிகரமான நாயகியாக பெயரெடுப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு வெற்றியை ருசித்தவர் கிர்த்தி ஷெட்டி. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த முதல் படமான "உப்பெனா" படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இளம் ரசிகர்களின் மத்தியில் நிறைய பேசப்பட்டார்.

தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்த "பங்கார்ராஜு, ஷியாம் சிங்கா ராய்" ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்ற கிர்த்திக்கு முதல் தோல்வியாக "வாரியர்" படம் அமைந்துவிட்டது என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்த "வாரியர்" படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. ராம் போலவே கிர்த்திக்கும் தமிழில் இதுதான் முதல் படம். தமிழில் இப்படம் சுமார் வெற்றியைக் கூடப் பெறவில்லை. தமிழில் தனது முதல் அறிகமுமே இப்படியாகிப் போனதில் கிர்த்தி ரொம்பவே அப்செட்டாம்.

அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் "வணங்கான்" படம் தனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் கிர்த்தி.