தமிழக சட்டசபை தேர்தலில், தாங்கள் வெல்ல வேண்டும் என்பதைவிட, தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.,வின் தலைமை உறுதியாக உள்ளது. காரணம், மத்தியிலும் பிற மாநிலங்களிலும், பா.ஜ.,வுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் 'இண்டி' கூட்டணியில், காங்கிரசுக்கு அடுத்த முக்கியமான கட்சி தி.மு.க., அதை சாதிக்க, மூன்று விஷயங்களை செய்ய வேண்டும் என்று பா.ஜ., நிர்ணயித்தது. ஒன்று, பிரமாண்ட கூட்டணி அமைக்க வேண்டும். இரண்டு, முடிந்தால் தி.மு.க., கூட்டணியை உடைக்க வேண்டும். மூன்று, தி.மு.க.,வின் பண பலத்தை எதிர்கொள்ள வேண்டும். இவற்றை மனதில் வைத்து, 2025 ஜனவரியிலேயே தேர்தல் வேலைகளை பா.ஜ., துவங்கிவிட்டது. அ.தி.மு.க.,வுடன் கடந்த ஏப்ரலில் கூட்டணியை அமைத்த பா.ஜ., தி.மு.க.,வை எதிர்கொள்ள சட்ட ரீதியான ஆதரவு மட்டுமல்லாமல், நிதி உதவியும் செய்கிறோம் என்று சொல்லியே கூட்டணியை அமைத்தது. இதற்கு உபகாரமாக, பிரமாண்ட கூட்டணி அமைப்பதற்கு முழு வீச்சில் அ.தி.மு.க., முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னது. இந்த தேர்தலில் 'எலக் ஷன் ஸ்பாயிலர்' ஆக தே.மு.தி.க., இருக்கும் என பா.ஜ., கணித்ததால், அவர்களை கூட்டணிக்கு அழைத்துவரும் 'அசைன்மென்ட்' அ.தி.மு.க.,விற்கு கொடுக்கப்பட்டது. அதற்கு, தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லுாரி விவகாரத்தை முடித்து வைக்க, பெரும் நிதி செலவு செய்ய வேண்டிருந்தது. நிதி தாராளமாக இருந்தும், ஏதோ தன் கையில் இருந்து நிதியை எடுத்துக் கொடுப்பது போல், தே.மு.தி.க., கோரிக்கைகளுக்கு தலையசைக்காமல் பழனிசாமி கறாராகவே இருந்தார். தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பழனிசாமியின் அணுகுமுறையை விரும்பவில்லை.