வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடக்கிறது. வினாத்தாள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதுவரை 10க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவால், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவர்கள் முன்னணி அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு விசாரித்தது. நீதிபதி நரசிம்மா பிறப்பித்த உத்தரவில், தேசிய தேர்வு முகமைக்குள் ஒரு நிலையான வேலைத்திறனையும், நிபுணத்துவத்தையும் எவ்வாறு உருவாக்கப் போகிறீர்கள்? இதற்காக தனித்துவமிக்க வல்லுநர்கள், நிபுணர் குழுக்களை எப்படி பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்? இதுதொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசு அடுத்த 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.