பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம்
பல திறமையான கலைஞர்கள் சினிமாவில் அறிமுகமாகி நட்சத்திரமாக மின்னி சில ஆண்டுகளிலேயே மறைந்தும் போயிருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் ஸ்ரீராம்.
மதுரையை சேர்ந்த ஸ்ரீராம், சினிமா ஆசையால் சென்னை வந்தார். ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்து விட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. தளராத முயற்சி, உழைப்பு, பசி பட்டினி இவற்றை கடந்து அவருக்கான வாய்ப்பு வந்தது. ஜெமினி நிறுவனம் தயாரித்த சரித்திர புகழ்பெற்ற "சந்திரலேகா"வில் குதிரை வீரனாக நடித்தார்.
இந்த படத்தில் அவர் குதிரை வீரனாக நடிப்பதை பார்த்து வியந்த இயக்குனர் கே.வேம்பு"மதனமாலா" படத்தில் ஓர் அழகிய ராஜகுமாரனாக நடிக்க வைத்தார். சரித்திர கேரக்டரில் நடித்த ஸ்ரீராம், சாதாரண குடும்பத்துப் பையனாக எப்படி இருப்பார் என்பதை அடுத்த ஆண்டே வெளியான "நவஜீவனம்" காட்டியது.
முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தபோது 1949ல் சிறந்த திரைப்படமாக "நவஜீவனம்" தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அன்றைய கல்லூரி மாணவ, மாணவியர் ஸ்ரீராம் ரசிகராக மாறினர்.
இதைப் பயன் படுத்திக்கொள்ளும் விதமாக ஜெமினி நிறுவனம் அடுத்து தயாரித்த "சம்சாரம்" படத்தில் அவருக்கு முக்கிய வேடம் அளித்தது. சகலகலா வல்லவன் படத்தில் கமல் நடித்தது மாதிரி, கிராமத்துப் பட்டிக்காட்டானாக இருந்து, பின் நவநாகரிக இளைஞனாக மாறும் இருபரிமாணக் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
ஸ்ரீராம் தனது கேரியில் 23 படங்களில் மட்டுமே நடித்தார். கணீர் குரல், ஸ்டைலான நடிப்பு, எம்.ஜி.ஆர்., ரஞ்சன் ஆகியோருக்கு இணையாக வாள் சுழற்றும் திறன், சிறந்த குதிரையேற்ற வீரர், நல்ல காரோட்டி எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ரீராம்.
"மலைக்கள்ளன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகவும் "பழனி" படத்தில் சிவாஜிக்குத் தம்பியாகவும் நடித்த நடித்ததும்தான் இப்போதும் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
அவர் தயாரித்த ஒரே படம் "மர்மவீரன்". இதில் ஸ்ரீராம் இரண்டு வேடங்களில் நடித்தார். சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர். எஸ்.வி.ஆர், வி.கே.ஆர், ஆர்.நாகேஷ்வரராவ் என முன்னணி நடிகர்கள் கவுரவ தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார்கள்.
பெரிய பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்த ஸ்ரீராம் திரையுலகை விட்டே விலகினார்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.