என் இளமைக்கு காரணம் உங்கள் அன்பு! ரசிகர்களுக்கு பூச்சூடுகிறார் நதியா
தமிழ் சினிமாவில், 1980- 90களில் கனவு நாயகியாக இருந்தவர் நடிகை நதியா. "பூவே பூச்சூடவா" படத்தில் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். 1988ம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து, வெளிநாட்டில் "செட்டில்" ஆகிவிட்டார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படத்தில் "ரீ என்ட்ரி" கொடுத்த நதியா, தாமிரபரணி, பட்டாளம், சண்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து "மாஸ்" காட்டினார். தற்போது தோனி தயாரிப்பு நிறுவனத்தில், அம்மா "கேரக்டரில்" நடித்துள்ளார். கோவை வந்த அவரிடம் ஒரு சில நறுக் கேள்விகள்; நறுக் பதில்கள்.
எல்.ஜி.எம்., படத்தை பற்றி கூறுங்களேன்...
முதலில் தோனி படம் எடுக்கிறாரா என்கிற சந்தேகம் வந்தது. பின்னர் இந்த படத்தில் இளைஞர்கள் பட்டாளம், நல்ல கதை அமைந்ததால் படத்தில் நடித்துள்ளேன். எல்.ஜி.எம்.,யில் "ஓபன் மைண்ட்" கொண்ட அம்மாவாக நடித்தது, இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும். படம் முழுவதும் "பன்" ஆக எடுக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லையே ஏன்?
தெலுங்கு படத்தில் "பிசியாக" இருந்து விட்டேன். எனக்கென தமிழ் ரசிகர் பட்டாளம் உள்ளது. நல்ல கதை அமைந்தால், கட்டாயம் படத்தில் நடிப்பேன். என்னுடைய வயதுக்கு நிறைய வாய்ப்புகள் கிடையாது. வயதுக்கு தகுந்த கதை அமைந்தால், கண்டிப்பாகநடிப்பேன்.
சினிமாவில் வில்லியாக நடிக்க வாய்ப்பு வந்தால்?
சினிமாவில் வில்லியாக நடிக்க விரும்பவில்லை. நல்ல "ஆக் ஷன்" படத்தில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை; ஆனால், அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன்.
நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பதன் ரகசியம்?
இவ்வளவு ஆண்டுகளாக ரசிகர்கள் எல்லோரும், என்னை அன்போடு பார்ப்பதால்தான், நான் இன்றும் இளமையாக இருக்கிறேன். வாழ்க்கையில் அன்பு தான் முக்கியம். உடலை கட்டுக்கோப்பாக வைக்க, எல்லா உணவும் சாப்பிடலாம். ஆனால் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். முடிந்த அளவு நடந்து செல்ல பழக வேண்டும்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.