கோவை சிறுமி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது! #CoimbatoreCase #GoondasAct கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் சோதனையில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக், அவனது நண்பன் மோகன்ராஜ் கைதாகினர். இருவர் மீதும் போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் தப்பி செல்ல முயன்றபோது விழுந்து கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளான். மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். கார்த்திக்கை ஜூன் 5 வரையிலும், மோகன்ராஜை மே 27 வரையிலும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மோகன்ராஜின் காவல் இன்று முடிந்ததை அடுத்து, கோவை போக்சோ கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டான். வழக்கை விசாரித்த நீதிபதி, மோகன்ராஜின் காவலை ஜூன் 5 தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பெயரில் கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.