‛இடஒதுக்கீடு, பெண்களிடமிருந்தே முதலில் ஆரம்பமாக வேண்டும்

‛இடஒதுக்கீடு, பெண்களிடமிருந்தே முதலில் ஆரம்பமாக வேண்டும்
Advertisement
எழுத்து அளவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்‛சூப்பர் குயின்" ரியாலிட்டி ஷோவில் சின்னத்திரை தொடரின் பிரபல நாயகியர் 12 பேர் ஒன்றாக களம் இறங்கியுள்ளனர். ‛சத்யா, நினைத்தாலே இனிக்கும், ராஜாமகள்" உள்ளிட்ட பல சீரியல்களில் பாத்திரங்களாகவே மக்கள் மத்தியில் பதிந்து விட்ட இவர்கள், ‛தாங்கள் யார் என்பதை காட்டவே ‛சூப்பர் குயின்" நிகழ்ச்சியில் பங்கேற்பதாக" கூறியுள்ளனர். பெண் சுதந்திரம், சமூக மாற்றம் குறித்து அவர்கள் அளித்த பேட்டி:

இன்றைய காலத்திற்கு ஏற்ற ராணி எப்படி இருக்க வேண்டும்?
‛ராஜாமகள்" சீரியலில் துளசியாகவும், மிஸ் தென்னிந்திய அழகி பட்டம் வென்றதுடன், சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனையுமான ஐரா:
இந்த சமூகத்திற்கு ரோல்மாடலாக இருப்பவளே ராணி ஆக முடியும். இளைய தலைமுறையினர் பலர் எங்களை பார்த்து வளருகின்றனர். ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கட்டாயம் கற்க வேண்டும். முகஅழகு மட்டுமே அழகு அல்ல. மனம் அழகாக இருந்தால், அது முகத்தில் தெரியும். இயற்கை மற்றும் அனைத்து விலங்களையும் பாதுகாப்பவளே ராணி.

சத்யா தொடரில் ஆக்சன் நாயகியாக வலம் வரும் ஆயிஷா: விட்டுக் கொடுக்கக்கூடிய விஷயங்களை மட்டுமே பெண்கள் விட்டுத்தர வேண்டும். முடியாது என்றால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இதை சரியாக பின்பற்றினால் எல்லாருமே ராணிகள் தான். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக்கூறும் மற்றவர்களிடம், நமக்கு இது வேண்டும்; செய்ய முடியும் என நினைத்தால், அதில் தைரியமாக இறங்கிவிட வேண்டும். இதை சிலர் திமிர் என்பர். ஆனால் அதை சுயமரியாதை என்பதை புரிய வைக்க வேண்டும்.

‛பேரன்பு" சீரியலில் வானதி பாத்திரத்தில் நடிக்கும் வைஷ்ணவி: பெண்கள் ஆல்ரவுண்டர். வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கிறாள் என சும்மா சொல்லி விட முடியாது. குடும்பத்தலைவியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த வகையில் எல்லா வீட்டிலும் ராணி இருக்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் பூமி பாத்திரத்தில் நடிக்கும் சுவாதி: அந்த ஒரு புன்னகை தாங்கிய முகமே, ஒவ்வொரு வீட்டிலும்; பணியிடத்திலும் சாதாரண பெண்ணை, ராணியாக்குகிறது. எதையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் போது, அப்பிரச்னையோ வேலையோ எளிதில் முடியும்.


பெண்களுக்கு பெண்களே எதிரியாக இருப்பது குறித்து?
ஆயிஷா:
ஆணும், பெண்ணும் மோதும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அங்கு கண்டிப்பாக யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பர். ஆனால் பெண்ணும், பெண்ணும் மோதும் விஷயங்களில் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைந்து விடும். இது பெண்களுக்கே உரிய குணம். ஆண்களின் சண்டை ரத்தகாயத்தோடு முடியும். பெண்களின் சண்டை இருக்கிறதே நாவினால் சுட்ட புண் ரகம். சுருக்கமாக சொன்னால், பெண்களுக்கான இடஒதுக்கீடு, பெண்களிடமிருந்தே முதலில் ஆரம்பமாக வேண்டும்.

வைஷ்ணவி: இதை ஒன்றும் செய்ய முடியாது. நாம் நாமாக இருந்தால், எந்த பிரச்னையும் இருக்காது. எதிரிகளையும் ‛பாசிடிவ்"வாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐரா: ‛உன்னை விட, அவ நல்லா இருக்கா பாரு"என சொல்லி சொல்லி வளர்க்கும் பலர் உள்ளனர். அவர்களிடமிருந்து பெண்கள் விலகி இருந்தால் இந்நிலை மாறும். மற்றவர்களை காட்டிலும் பெண்களுக்கு சமூக அழுத்தம் அதிகமாக உள்ளது. ஒருவருக்கு ஒருவர் பாராட்டு தெரிவித்து வாழ்ந்தாலே எதிரிகள் இல்லாமல் போவர்.

பெண் சுதந்திரம் குறித்து உங்கள் கருத்து?
ஐரா:
பெண் சுதந்திரம் என்பதை சிலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். மது குடிப்பது, புகை பிடிப்பதில் சுதந்திரம் இல்லை. படிப்போ, பணியோ நமக்கான லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது, அதில் தடை இருக்கக் கூடாது. இதில் சுதந்திரம் வேண்டும்.

ஆயிஷா: ஆண்களை போல் நாங்களும் எல்லாத்தையும் செய்வோம் என்பது சுதந்திரம் அல்ல. ஆணோ பெண்ணோ இருவரும் மனிதர்களே. இன்னொரு உயிரை பெற்று எடுப்பவள் பெண் தான். அதனால் ஆணை விட பெண்ணே சிறந்தவர். ஒரு பெண் தனியா வெளியே போகும் போது பாதுகாப்பாக சென்று வரும் நிலை வர வேண்டும்.

வைஷ்ணவி: யாருடைய சுதந்திரத்தையும் யாரும் பறிக்க முடியாது. அவரவர் விருப்பப்படி செயல்பட வேண்டும். அதன் மூலம் பெறப்படும் நல்லது, கெட்டதும் அவர்களையே சேரும் என்பதால், அதில் கவனமாக செயல்பட்டால் போதும்.


சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றம் தேவை?
ஐரா:
வளரும் தலைமுறை நிறம், மதத்தை பார்த்து வளராது என நம்புகிறேன். அனைவரையும் சமமாக பார்ப்பர். இயற்கை தான் கடவுளாக இருக்கப் போகிறது. விலங்குகளை தத்தெடுப்பது இயற்கையை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவர்.

வைஷ்ணவி: தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மாறினாலே சமூகம் நல்லவிதமாக மாறும்.

சுவாதி: உடையை பார்த்தே பெண்ணின் குணத்தை முடிவு செய்கின்றனர். இது மாற வேண்டும். ஜீன்ஸ் அணிந்தால் கெட்டவள்; சேலை உடுத்தினால் நல்லவள் என்கிறார்கள். உண்மையில் சேலை தான் பெண்ணை கவர்ச்சியாக காட்டுகிறது.
-நமது நிருபர்-

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map