பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை
பழம்பெரும் நடிகை குமாரி ருக்மணி. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி போன்ற படங்களில் நடித்தார். 1946ல் வெளியான "லவங்கி" படத்தில் நாயகனாக நடித்த இயக்குநர் ஒய்.வி.ராவுடன் குமாரி ருக்மணிக்கு காதல் திருமணம் நடந்தது.
ஸ்ரீராம் ஜோடியாக நடித்த "முல்லைவனம்" குமாரி ருக்மணி கதாநாயகியாக நடித்த கடைசிப் படம். கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் 1961 தொடங்கி 1975 வரையில் பல திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்தார். இவர் தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமியின் தாயார்.
1947ல் வெளியான "பங்கஜவல்லி" படத்தில் கிருஷ்ணனாக ஆண் வேடத்தில் நடித்தார். பொதுவாக புராண கதைகளில் பெண்கள் ஆண் வேடத்தில் நடிப்பதில்லை. இதனை இருவர் மாற்றினார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார். அதற்கு பிறகு குமாரி ருக்மணி நடித்தார். கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க ஆண் நடிகர்களே கிடைக்கவில்லையா? என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது.
"பங்கஜவல்லி" என்பது மகாபாரத்தில் வரும் ஒரு கிளை கதை. அல்லிராணி கதை போன்றது. ஆண்களை அடிமைப்படுத்தி நாட்டை ஆண்ட மாகராணி பங்கஜவல்லி. அவரை அர்ஜூனன் காதலிக்கிறார். ஆனால் பங்கஜவல்லி அர்ஜூனனை சிறையில் அடைத்து விடுகிறார். அர்ஜூனன் கிருஷ்ணரிடம் முறையிட கிருஷ்ணர் அர்ஜூனனை பெண்ணாக மாற்றுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.
இதில் அர்ஜூனனாக பி.யு.சின்னப்பா நடித்திருந்தார். பங்கஜவல்லியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்திருந்தார். 1947ம் ஆண்டு படம் வெளியானது. மலையாளத்தில் வெளிவந்த "மலையாள பங்கஜவல்லி "என்ற படத்தின் ரீமேக் இது. இதனை எஸ்.சவுந்தர்ராஜ அய்யங்கார் இயக்கி இருந்தார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.