வீட்டை விட்டு வெளியே வராதீங்க... மோடி அவசர அறிவுரை | PM Modi advice | Heatstrok | Heatwave கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: நாடு முழுதும் பல இடங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கிறது. கோடை வெயில் தாக்கத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில், மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கே போனாலும் தண்ணீர் கொண்டு செல்லுங்கள். உடல் வறண்டு விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி அல்லது கடுமையான சோர்வு போன்ற எந்தவொரு அசவுகரியத்தையும் அலட்சியப்படுத்த வேண்டாம். இந்த சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி உள்ளிட்ட அன்புக்குரியவர்களை தொலைபேசியில் அழைத்து அடிக்கடி நலம் விசாரியுங்கள். அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும், நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதிய ஓய்வெடுக்கவும் அவர்களை அறிவுறுத்துங்கள். சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இந்த கொளுத்தும் வெயிலில், விலங்குகளையும் பறவைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதுவும் முக்கியம். நமது வீட்டு மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலக முற்றங்களில் தண்ணீர் நிரப்பிய சிறிய பாத்திரங்களை வைப்பது பறவைகளின் தாகம் தணிக்கும். இந்த இக்கட்டான நாட்களில் அனைவரும் முழு மனிதாபிமானத்தோடும், இரக்கத்தோடும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வோம். இந்த கடினமான நாட்களில் கருணை நம்மை வழிநடத்தட்டும் என்று மோடி கூறி உள்ளார்.