40 வருடங்களை நிறைவு செய்யும் விக்ரம்
தமிழ் சினிமாவில் சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் அவற்றில் சில படங்கள் வியக்க வைத்த படங்களா அமையும். அப்படி ஒரு படமாக 1986ம் ஆண்டு இதே நாளான மே 29 அன்று வெளியான "விக்ரம்" படம் அமைந்தது.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில், கமல்ஹாசன், சத்யராஜ், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிஸி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்.
அந்தக் காலத்தில் படம் வந்த போது ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்ப்பது போன்று இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் பாராட்டு மட்டும் படத்தின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை.
இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த "அக்னிபுத்ரன்" என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சத்யராஜ் கும்பல் கடத்திவிடுகிறது. தேசத் துரோக வழக்கிற்காக கைது செய்யப்பட்ட மூன்று பேரை விடுவித்தால்தான் அந்த ஏவுகணையைக் கொடுப்போம் என்கிறார்கள். இந்திய உளவுப் பிரிவான "ரா"வின் அதிகாரி, அதைக் கண்டுபிடிக்க முன்னாள் அதிகாரியான கமல்ஹாசனை அழைக்கிறார். ஆனால், மீண்டும் பணிக்கு வர மறுக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் தேனிலவில் இருக்கும் போது கமல்ஹாசன் மனைவி அம்பிகா கொல்லப்பட, அழைப்பை ஏற்று பணிக்குச் செல்கிறார் கமல்ஹாசன்.
சலாமியா என்ற நாட்டில் ஏவுகணை இருக்கலாம் என கமல்ஹாசனும், கம்ப்யூட்டர் இஞ்சினியரான லிஸியும் புறப்படுகிறார்கள். அவர்கள் ஏவுகணையைக் கண்டுபிடித்தார்களா, கடத்தியவர்களை கைது செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
அழகான கமல்ஹாசனின் அதிரடி ஆக்ஷன், சிறிது நேரமே வந்தாலும் மனம் கவர்ந்த அம்பிகா, ஹிந்தியிலிருந்து வந்த டிம்பிள் கபாடியா, லிஸி, வித்தியாசமான வில்லன் வேடத்தில் சத்யராஜ், சலாமியா அரசர் அம்ஜத்கான், மொழி பெயர்ப்பாளர் ஜனகராஜ் என மற்ற கதாபாத்திரங்களும் சுவாரசியமாக அமைக்கப்பட்டவை. டிம்பிள், லிஸி இருவரும் அறிமுகமான தமிழ்ப் படம் இது.
இளையராஜா இசையில் இடம் பெற்ற, “வனிதாமணி வனமோகினி, மீண்டும் மீண்டும் வா, எஞ்சோடி மஞ்சக் குருவி, சிப்பிக்குள் ஒரு முத்து, விக்ரம் விக்ரம்” ஆகிய ஐந்து பாடல்களும் அந்தக் காலத்தில் அதிக கேசட்டுகள் விற்கக் காரணமாக இருந்த சூப்பர் ஹிட் பாடல்கள். குறிப்பாக "மீண்டும் மீண்டும் வா" பாடலில் டிம்பிள் கபாடியாவின் கிளாமரில் கிறங்கிப் போனார்கள் அந்தக் கால இளைஞர்கள்.
எழுத்தாளர் சுஜாதா வாரப் பத்திரிகை ஒன்றில் எழுதிய கதைதான் "விக்ரம்" படமாக உருவானது. பிற்காலத்தில் வரவேண்டிய ஒரு படத்தை சீக்கிரத்திலேயே கொடுத்துவிட்டார்கள் என கமல்ஹாசன் ரசிகர்கள் படத்தின் தோல்விக்குப் பிறகு கூறினார்கள்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.