விக்ரம் படத்தில் கிடைத்த சர்ப்ரைஸ் : நடிகர் ஜாபர்சாதிக்
"பாவக்கதைகள்" திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி "வெந்து தணிந்தது காடு" படத்தில் "ராவுத்தர்" கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடன இயக்குனரும், நடிகருமான ஜாபர் சாதிக். அவர் அளித்த பேட்டி...
ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்தேன். எதிர்காலம் சினிமாத்துறை என தீர்க்கமாக இருந்ததால் கல்லுாரிக்கு செல்லவில்லை. இயக்குனர் விக்னேஷ்சிவன் குழுவில் உள்ள நண்பர் மூலம் "பாவக்கதைகள்" நடிகர்கள் தேர்வு ஆடிஷனில் பங்கேற்று தேர்வானேன். அதில் நான் நடித்த "லவ் பண்ண விட்றணும்" வசனம் பாப்புலர் ஆகிவிட்டது.
"பாவக்கதைகள்" படிப்பிடிப்பு முடிந்த 6 நாட்களிலேயே "விக்ரம்" படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைத்து, "கமலின் கால் கட் பண்ணும் கதாபாத்திரம்" எனக் கூறினார். திடீர்னு வாழ்க்கையில் "சர்ப்ரைஸ்" கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை போல் இனம்புரியாத சந்தோஷம் கிடைத்தது. எட்டு ஆண்டுகள் நடனம் ஆடிக்கிட்டு இருந்தேன். ஒரு நடிகருக்கு அந்த கதாபாத்திரத்தால் என்ன மனநிறைவு கிடைக்குமோ அதை நான் உணர்ந்தேன். கமல் பாராட்டினார்.
"வெந்து தணிந்தது காடு" ராவுத்தர் கதாபாத்திரம் இயக்குனர் கவுதம் வாசுதேவமேனன் சாய்ஸ். இயக்குனர் சொல்வதை நடித்து விடுவேன். கூடுதல் பலமாக ஜிம்னாஸ்டிக், டான்ஸ் தெரிந்ததால் அந்த வில்லன் ராவுத்தர் கதாபாத்திரம் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டது.ஒரு டான்சரா சிம்புவை சின்ன வயதில் இருந்தே பிடிக்கும். அப்படி நான் பார்த்த மனிதரோடு நடிக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளத்தில் திலீப்புடன் இணைந்து "வாய்ஸ் ஆப் சத்தியநாதன்" படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கு வெப் சீரிஸ், மூன்று தமிழ், ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறேன் என்றார்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.