பாடல்களாய் உலகம் சுற்றுவேன்
எழுத்து
அளவு
வார்த்தைகளை கோர்வையாக பேசுவதற்கு முன்பாகவே பாடல்களை பாடினேன். இன்று
பாட்டே முழுநேரத் தொழிலாக மாறி என்னை உலகம் சுற்ற வைக்கிறது என்கிறார்
திரையிசைப் பாடகர் பெபின். தமிழ், மலையாளப் படங்களில் பாடல்கள்
பாடியுள்ள பெபினின் இசைப்பயணம் குறித்து அவர் கூறியதாவது: பிறந்தது
கேரளாவின் ஆலுவா. கோவையில் பி.காம் படித்தேன். அம்மா ஹைருன்னிஷா
நன்றாக பாடுவார். அப்பா பரீது பிள்ளை படத்தயாரிப்பாளர். நடிகர் தேவனை
வைத்து நாதம் என்கிற மலையாளப்படம் தயாரித்தார். எனது இசையார்வம் கண்ட
பெற்றோர் கோவையில் கர்நாடக சங்கீத பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
பள்ளிகளில் நடந்த பாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்தேன்.
கல்லுாரி முடித்த பின் 2016ல் டிவி ரியாலிட்டி ஷோவில் வாய்ப்பு கிடைத்து
அதில் "டாப் 10" இடத்திற்கு முன்னேறினேன். மற்றொரு டிவியில் நடத்திய
சங்கீத மகா யுத்தம் நிகழ்ச்சியில் "டைட்டில் வின்னர்" ஆனேன். அந்த
நிகழ்ச்சியைப் பார்த்த நடிகர் கருணாஸ், அவரது ரகளபுரம் படத்தில் எனக்கு
பாடல் பாட வாய்ப்புத் தந்தார். பாடலாசிரியர் வைரமுத்து வரிகளில் ஸ்ரீகாந்த்
தேவா இசையில் "அடி தேவலோக ரதியே... " பாடல் பாடினேன். பின் சிறிய பட்ஜெட்
படங்களில் பாடினேன். இதற்கிடையே கோவையில் இருந்து "ஈவென்ட்ஸ்" தயாரிக்கும்
நிறுவனம் தொடங்கினேன். இதுவரை 6000 மேடைக் கச்சேரிகளில்
பாடியுள்ளேன். ஸ்விட்சர்லாந்து 2 முறை, மஸ்கட், பக்ரைன், ஷார்ஜா,
மலேசியா... என திரையிசைப்பாடல்கள் என்னை உலகம் சுற்ற வைக்கிறது.
முத்திரை வேண்டாமே எல்லா பாடகர்களின் பாடல்களையும் மேடையில் பாடுகிறேன்.
பெபின் மெலடி பாட்டு தான் பாடுவார், குத்துப்பாட்டு தான் பாடுவார் என்ற
முத்திரைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எல்லாவித பாடல்களையும்
பாடுபவர் தான் "வெர்சடைல்" பாடகர். எஸ்.பி. பாலசுப்ரமணியம், அனுராதா
ஸ்ரீராம் எந்த "ஜானரில்" பாடல் கொடுத்தாலும் பிரமாதமாக பாடுவார்கள். அந்த
வழியை தான் பின்பற்றுகிறேன். எனது பாடலை கேட்பவர்கள் கே.ஜே.
ஜேசுதாஸ் குரலின் சாயல் இருக்கிறது என்கின்றனர். ஜேசுதாஸ் பாட வேண்டிய
பாடலுக்காக நான் ஏற்கனவே பாடிக் கொடுத்த (ஸ்கிராச்) அனுபவம் உள்ளது.
பிரபலமான சிங்கர் பாடுவதற்கு முன்பாக அதே பாடலுக்கு வேறொரு சிங்கர் பாட
வேண்டும். அதை "ஸ்கிராச்" என்போம். எனது பாடலை கேட்டு ஜேசுதாஸ் பாடினார்.
உன்னிகிருஷ்ணனின் பக்திபாடல் ஆல்பத்திற்கான அனைத்து பாடல்களையும் நான்
பாடிய பிறகே அவர் பாடினார். வாய்ப்புகள் காத்திருக்காது
பாடகர்களுக்காக காத்திருக்கும் நிலை இப்போதில்லை. திடீரென வரச் சொல்லும்
போது உடனே செல்ல முடியாது. வேறொருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சில நேரங்களில் நான் பாடிவிட்டு வந்தாலும் வெளியில் வரும் போது வேறொரு
பாடகர் பாடியிருப்பார். திரையுலகில் இது சாதாரணம் தான். நமக்கென்று
வரவேண்டிய பாடல்கள் கண்டிப்பாக வரும். மேடைக்கு கீழே
அமர்ந்திருக்கும் ரசிகர்களின் இசைஆர்வத்திற்கேற்ப பாடுவேன். மேடையில் பாடத்
தொடங்கும் போது தாயைப் போற்றும் பாடலில் தான் துவங்குவேன்.
மணிரத்னத்தின் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல்களை "மெட்லே"
பாணியில் பாடும் போது கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும். வெளிநாடுகளில்
இசைக்கலைஞர்களுக்கு அதிக மரியாதையும் வரவேற்பும் உள்ளது. ஸ்விட்சர்லாந்தில்
ஆண்டு முழுவதும் வேலை செய்வார்கள். டிசம்பரில் விடுமுறை விடப்படும். அந்த
விடுமுறையில் இசைகேட்டு மகிழவே விரும்புவார்கள். மெலடி அதிகம்
விரும்புவார்கள். ஆடுவதற்கு குத்துப்பாட்டு பாடச்சொல்வார்கள்.
எனது பாடல்களில் எஸ்.பி.பி., பாடிய "இளையநிலா பொழிகிறது... இதயம் வரை
நனைகிறதே" எப்போதும் இருக்கும். இந்தப்பாடல் எந்த தலைமுறையைச் சேர்ந்தவராக
இருந்தாலும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி விடுகிறது. கூட சேர்ந்து பாடுகின்றனர்.
இசையை, நல்ல சங்கீதத்தை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்,
கொண்டாடுகின்றனர். இந்த ரசிகத்தன்மை இருக்கும் வரை இன்னமும் நிறைய
கச்சேரிகளுக்காக உலகம் சுற்றி வருவேன் என்றார்.
நட்சத்திரங்களின் பேட்டி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.