தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்?
இயக்குனர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த கதாநாயகர்கள் அந்தக் காலத்தோடு போய்விட்டார். இப்போது அது மாறிவிட்டது. கதாநாயகர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
அதற்கு சமீபத்திய உதாரணமாக "குட் பேட் அக்லி" படம் அமைந்துவிட்டது. "த்ரிஷா இல்லனா நயன்தாரா" என்ற "அடல்ட் காமெடி" படத்தையும், " "அட்ரஸ்" இல்லாமல் போன "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தையும், "பகீர்" என பதற வைத்த "பகீரா" படத்தையும், மார்க் ஆண்டனி" என்ற "அடாவடி காமெடி" படத்தையும் இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
திடீர் வாய்ப்பாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஒரு "பேன் பாய்" படமாக அந்தப் படம் இருக்கும் என்று பேசி என்னமோ கொடுத்து படத்தை ஓட வைத்துவிட்டார்கள். 200 கோடி வசூலைக் கடந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசி முடிக்கும் போது, “ஐ லவ் யூ அஜித் சார், நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விடவும் உங்களுக்குத்தான் அதிகம் ஐ லவ் யூ சொல்லி உள்ளேன். அதுதான் உண்மையும் கூட. எனது மனைவியை விட உங்களை தான் சார் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோர்களுக்கு அடுத்து எனது வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் சார்" என பேசி முடித்தார்.
ஆதிக்கின் மனைவி வேறு யாருமல்ல. மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் பேத்தி, நடிகர் பிரபுவின் மகள். இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.
அது மட்டுமல்ல "குட் பேட் அக்லி" படத்தின் "என்ட் டைட்டில் கார்டு" வரும் போது படத்தின் "பிஹின்ட் சீன்ஸ்" காட்சிகள் இடம் பெற்றன. அதில், அஜித்தின் காலில் ஆதிக் விழும் காட்சியும், அவரது கையை முத்தமிடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
தனது ரசிகர்கள் ரசிகர் மன்றம் என்று தங்களது நேரத்தை குடும்பத்திற்கு செலவிடாமல் தன் பின்னால் வரக் கூடாது என பல வருடங்களுக்கு முன்பே கலைத்தவர் அஜித். அவரை "தல" என்று அழைத்த போதும், "கடவுளே" என்று ஆர்ப்பரித்த போதும் அப்படியெல்லாம் தன்னை கொண்டாடக் கூடாது என்றார்.
அப்படிப்பட்டவர் "குட் பேட் அக்லி" படத்தின் "என்ட் கார்டில்" மேலே குறிப்பிட்ட காட்சிகளை எப்படி அனுமதித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், நன்றி விழாவில் ஆதிக் பேசியது பற்றி அஜித் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. சிவாஜி குடும்பத்தினர் மீது அதிக மரியாதை வைத்திருக்கும் அஜித், ஆதிக்கின் பேச்சைக் கண்டித்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
“அடுத்த பட வாய்ப்புக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது,” என கோடம்பாக்கத்தில் சில இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் பேசுவதை காதில் கேட்க முடிந்தது.
அப்படியான பேச்சுகளுக்கு ஒரு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைப்பாரா அஜித்குமார் ?.
கோலிவுட் செய்திகள்
தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள்
தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில்
சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.